நான் திட்டமிடல் இல்லாமல் பெரும்பாலும் எதையும் செய்வதில்லை(???!). திட்டமிட்டு செய்ய நினைக்கும் பல வேலைகளையும் சரியாக செய்வதில்லை. கடந்து சென்ற 2011ல் செய்வதற்கென்று பெரிதான திட்டங்கள் எதுவும் இருக்கவில்லை. ஆக எதையும் சாதித்து கிழிக்கவும் இல்லை.

நாம் சந்திக்கும் மனிதர்களும் அவர்களின் வாழ்க்கை அனுபவங்களும் தான் எமது எண்ணங்களை இன்னமும் விசாலமாக்குகின்றன. மார்ச் மாதத்தின் பின்னர் சந்தித்த சில புதிய நண்பர்களும் அவர்களுடனான பயணங்களும் பல புதிய அனுபவங்களைத் தந்தன. நாடு, மொழி, நிறம் கடந்து பல பண்பாட்டு பின்புலங்களில் இருந்து வரும் மனிதர்களை சந்திக்க ஒரு வாய்ப்பாகவும் இது அமைந்தது. வாழ்க்கையின் போக்கில் ஒரு வருடம் சிலவேளைகளில் குறுகியதாகவும், மற்றும் சிலவேளைகளில் நீண்டதாகவும் உணரப்படும். ஒரு வருடத்தின் பின்னரான இலங்கைப் பயணத்தில் இதை நேரடியாக காணமுடிந்தது.
இந்த வருடம் நான் பெரிதாக எதையும் செய்வேண்டும் என்று நினைக்கவுமில்லை, செய்யவுமில்லை. கடந்த வருடங்களைப் போலவே அவ்வப்போது புகைப்படங்கள் எடுப்பதை மட்டுமே ஒரு பொழுதுபோக்காக இருந்தது. இந்த ஆர்வம் வீடியோக்கள் எடுப்பதாக மாறிய பின்னர் புகைப்படங்களை எடுப்பது குறைந்து ஒரு கட்டத்தில் இல்லாமலேயே போய்விட்டது. ஆனாலும் சரியாக திட்டமிடல் இல்லாமல் நினைத்த மாதிரியான உருப்படியான வீடியோக்களை உருவாக்குவதும் சாத்தியமாகவில்லை.
முடிவாக 2011ல் முழுமையாக செய்ததாக எதுவுமே இல்லை. 2012, பார்க்கலாம்…
புதுவருட வாழ்த்துகள்…!






