நிமலின் பதிவு

Icon

என் எண்ணங்கள்… என் தமிழில்…

ஒரு மாதமும் ஒரு நாளும்

நான் பிரிஸ்பேன் வந்து இன்றுடன் ஒரு மாதமும் ஒரு நாளும் ஆகிறது. மூன்று வருட அவுஸ்திரேலிய வாழ்க்கையின் ஆரம்பம். புதிய இடம், புதிய மக்கள், புதிய தனிமை, புதிய அனுபவம், கடந்த ஒருமாத அனுபவங்களின் தொகுப்பு இது. (பதிவு வைத்திருக்கும் இலங்கைப் பதிவர் என்பதிலிருந்து இனி பதிவு வைத்திருக்கும் அவுஸ்த்திரேலிய பதிவர் என்றும் சொல்லலாம்.)

சில நாள் பயணம்

ஏப்ரல் 23 – கொழும்பிலிருத்து சிங்கப்பூர் வழியே சிட்னி, பின் பிரிஸ்பேன். வெறிச்சோடி இருத்த கொழும்பு-சிங்கப்பூர் விமானத்தில் அதிகாலை/நடுராத்திரி 1 மணிக்கு தந்த காலை(?) சாப்பாட்டுக்குப் பின் 3 ஆசனங்களில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழும்பினால் சிங்கப்பூர். ஆனா ஒரு அரைமணி நேரம் சிங்கப்பூரை சுத்திக்காட்டிய பின்னர் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி. அடுத்து சிங்கப்பூர்-சிட்னி விமானம் இரவு 8மணிக்கு(!). இடைப்பட்ட 12 மணித்தியாலம்  பல்கலைக்கழக நண்பன் பிறைதீசனோடு சிங்கப்பூர் சுத்துப்பார்த்துவிட்டு மீண்டும் இரவு 7 மணிக்கு விமான நிலையத்துக்கு வந்தோம். சிட்னிக்கான இரட்டைத்தட்டு விமானத்தில் பயணித்ததும் ஒரு முதல் அனுபவம். 7 மணித்தியால பயணத்தில் 2 தடவை உணவு, சில மணிநேர தூக்கம் என்று சிட்னியில் தரையிறங்கும் போது நேரம் காலை 7 மணி – ஏப்ரல் 24.

ஏப்ரல் 24 – உறவினர்களுன் இரண்டு நாட்களும் நண்பர்கள் சஞ்சயன், கேசவனுடன் ஒரு நாளும், மீதி தூக்கத்திலும் என்று சிட்னியில் தங்கியிருந்த நான்கு நாடகளும் போயின. வலைப்பதிவர் கானா பிரபா சிட்னியில் இருக்கும் விடையம் மறந்து போனதால் அவரை சந்திக்க சந்தர்ப்பம் வாய்கவில்லை. (இல்லாவிட்டால் ஒரு பதிவர் சந்திப்பு நடத்தியிருக்கலாம்). சிட்னியில் இருந்து பிரிஸ்பேன் வந்த போது நேரம் இரவு 11 மணி – ஏப்ரல் 27.

பல்கலைக்கழகம்

ஏப்ரல் 28 – பல்கலைக்கழகத்தில் முதல் நாள். ஒரு ஆராய்ச்சி மாணவனாக இருப்பதாலும் தவணை ஆரம்பித்து 2 1/2 மாதங்களின் பின்னர் சேர்வதாலும் இலகுவாக பதிவுசெய்தல் மற்றும் இதர செயற்பாடுகளை செய்ய முடிந்தது. வாரம் ஒருதடவை எனது research supervisorஐ சந்திப்பது தவிர்த்து மீதி எல்லாம் சுயகற்றலாகவே (இப்போது இரண்டு பெரும் புத்துகங்களோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறேன்.) இன்றுடன் ஒரு மாதம் – மே 28.

தமிழ்க் கோவில், தமிழ்ப் பாடசாலை மற்றும் Duplex Mode

ஒரு சில குடும்ப நண்பர்கள், முகுந்த் மற்றும் சில பல்கலைக்கழக சீனியர்கள் தவிர பிரிஸ்பேனில் வேறு தமிழர்கள் யாரையும் எனக்கு தெரிந்திருக்கவிலை. ஒரு தடவை குயின்ஸ்லாந்து பிள்ளையார் கோவிலுக்கும் போன போது அங்கு சில தமிழர்களையும் காண முடிந்தது. இங்கும் எல்லாவிதமான அர்ச்சனைகளும் பூசைகளும் இருக்கின்றன. தமிழர்கள் மட்டுமல்லாது வேறு இந்துக்களும் அங்குவருவதை அவதானிக்க முடிந்தது. (அர்ச்சனை பிரசாதமாக ஆப்பிள் வழங்கப்படுகிறது.)

முகுந்த் மூலமாக ‘தமிழ் பிரிஸ்பேன்’ மின்னஞ்சல் குழுமம் பற்றி அறிந்து அந்த குழுவில் இணைந்து கொண்டேன். கடந்த ஞாயிறு பிரிஸ்பேன் தமிழ்ப் பாடசாலையின் விளையாட்டு போட்டிக்கும் போகும் சந்தர்ப்பம் அமைந்து. அங்கு பலருடன் உரையாடும் சந்தர்பமும் கிடைத்தது. தமிழ்ப் பாடசாலை என்றாலும் இங்கு ஆங்கிலம் மூலமாகவே தமிழ் கற்பிக்கப்படுகிறது. இந்த பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்புவது ஒரு குற்ற உணர்ச்சியாலா அல்லது தங்கள் பிள்ளைகளும் தமிழ் கற்கவேண்டும் என்ற எண்ணத்தாலா என்பது எனக்கு குழப்பமாகவே இருந்தது. பல பெற்றொரும் தமது பிள்ளைகளுன் ஆங்கிலத்திலேயே உரையாடுவதை காணக்கூடியதாக இருந்தது.

வெளிநாடுகளில் வாழும் தமிழ் குடும்பங்களில் காணக்கூடிய இன்னொரு முக்கிய அம்சம் ‘Duplex Mode Communication”. அதாவது பிள்ளைகளுக்கு தமிழ் (ஓரளவு) விளங்கும், ஆனால் கதைக்கமாட்டார்கள். ஆதலால் பெற்றோர் தமிழில் உரையாடுவார்கள், பிள்ளைகள் ஆங்கிலத்தில் உரையாடுவார்கள். இந்த விசித்திரமான உரையாடல்களை கிரகித்து கொள்ள சிலகாலம் தேவை. ஆக இந்த தலைமுறையோடு அவர்கள் ஆங்கிலம் பேசும் தமிழர்கள் ஆகிவிடுவார்கள். அதாவது தமிழர் என்பது ஒரு மொழி கடந்த ஒரு சமூக அடையாளமாக மாறிவிடும்.

தனிமையும் ஒரு அனுபவம்

வெளிநாட்டு கல்வி, தனிமையான வாழ்க்கை என்று பலரும் பயங்காட்டினாலும், இதுவும் ஒரு புதிய அனுபவமாக தான் இருக்கிறது. ஒரு புதிய நகரம், புதிய மனிதர்கள், புதிய மனிதர்கள் என ஒரு பெரு நகரத்தில் தொலைந்த குழந்தையை போன்ற அனுபவம், ஆனால் இங்கும் பல புதிய விடையங்கள் சூழ்ந்திருகின்றன அறிந்து கொள்ள. இந்த அனுபவம் எனக்கு பிடித்திருக்கிறது, தனிமை என்பது தனித்திருப்பது அல்ல என்பதும் புரிந்திருக்கிறது.

பார்த்த படங்கள் 2010 (ஜனவரி – மார்ச்)

நான் திரையரங்கில் படம் பார்ப்பது குறைவு, பெரும்பாலும் YouTubeஉம் Torrentஉம் தான். அப்படி பார்த்த சில படங்கள் பற்றி, நான் அவ்வப்போது எழுதி வைத்தவை. (ஒரு டயறி குறிப்பு போல).

Just for my personal reference…!

விண்ணைத்தாண்டி வருவாயா (Vinnaithaandi Varuvaayaa) – நான் வாழ்க்கையில் பார்க்கும் என்னைச்சுற்றி நடக்கும் (பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்) பல சம்பவங்கள். இனிய Romantic Musical. அளவான நடிப்பு, அழகான ஒளிப்பதிவு. தெலுகு Ye Maaya Chesave முடிவை விட Vinnaithaandi Varuvaayaa முடிவுதான் பிடித்திருத்தது. படம் பிடித்திருந்தது…! (9/10)

ஆயிரத்தில் ஒருவன் (Aayirathil Oruvan) – தமிழில் நான் பார்த்த படங்களில் மிகவும் வித்தியாசமான படங்களில் ஒன்று, (தமிழில்…!). முக்கியமாக ஒளிப்பதிவும் இசையும். படம் பார்த்து முடித்த பின் எழுத்திலே கொண்டுவர முடியாத ஒரு உணர்வு. இப்படியான படங்கள் இனியும் வரவேண்டும். படம் பிடித்திருந்தது. (9/10)

தமிழ் படம் (Thamizh Padam) – புது முயற்சி. முடிவிலே திகட்டினாலும், மொத்தத்தில் சூப்பர். நல்ல இசை, ‘ஒமகசீயா’ பாடலும் தான். படம் பிடித்திருந்தது. (8/10)

கோவா (Goa) – நாம் பொதுவிலே பேச மறுக்கும், ஆனால் ‘கலாச்சாரத்துக்கு புதிது அல்லாத’ உறவு முறைகளை சாதாரணமாக காட்சிப்படுத்தியிருந்தது. நல்ல நகைச்சுவை, நல்ல இசை, நல்ல பொழுதுபோக்கு படம். படம் பிடித்திருந்தது. (7/10)

புகைப்படம் (Pugaippadam) – இந்த வருடம் வெளியான, நான் பார்த்த முதல் தமிழ்ப்படம். வித்தியாசம் என்று எதுவும் இல்லாத கதை, புதிய நடிகர்கள். காலத்தால் சற்று பிந்திய, இனிய இசை. இன்றைக்கும் என் பயணங்களில் நான் கேட்கும் ‘இது கனவோ’ பாடல். முடிவில் கொஞ்சம் சொதப்பல். படம் பிடித்திருந்தது. (7/10)

குட்டி (Kutty) – சுமாரான கதை, நல்ல நகைச்சுவை. (பார்க்கும் போது) படம் பிடித்திருந்தது. (இப்போது) படம் பரவாயில்லை. (6/10)

தீராத விளையாட்டு பிள்ளை (Theeradha Vilaiyattu Pillai) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். சுமாரான நகைச்சுவை, சுமாரான பாடல்கள், நல்ல பாடல் காட்சிகள். படம் பரவாயில்லை. (5/10)

கச்சேரி ஆரம்பம் (Kacheri Arambam) – வெட்டியாக இருக்கும் போது நெட்டிலே பார்த்த படம். படம் பரவாயில்லை. (5/10)

(பலர் யதார்த்தத்தை மீறிய என்று சொல்லும்)

ஒரு காதல் கதையின் மறுபக்கம்

நான் நீண்டநாட்களுக்கு முன்னர் எழுத தொடங்கி பின்னர் காணமல் போன கதையின் மறுபக்கம். இது எனது பதிவுக்கு பதில் பதிவும் அல்ல, இது நான் எழுதியதும் அல்ல. எழுதியவருக்கு நன்றி…!

உன் ரசிகையாய் வந்து காதலாய் மாறி கனவாகிப்போன கதை இது!

பள்ளிப்பாடம் படிக்கும் போது கொஞ்சம் bore அடிக்க
வேறெந்த நினைவுமின்றி என் நினைவில் நீ மட்டும் எப்படி?

நீ விட்டுச்சென்ற நினைவுகள் அழிந்து போக
உன்மேல் இருந்த காதல் சிதைந்து போக
உனக்காக என் உடல் தழும்புகள் மட்டும் இன்னும் உயிர் வாழுவதனாலா?

காதல் என்ற சொல்லுக்கு அர்த்தம் தந்தவனும் நீ தான்
உன்னோடு என் காதல் கல்லறைக்கு அடிக்கல் எடுத்து தந்தவனும் நீ தான்!

என் காதல், காதல் என்ற புனிதசொல்லை சுமக்க தகுதியானதா? தெரியவில்லை

இரண்டு வருட முகில்கள்
எந்நாளும் பனிமூட்டம்
எப்போதாவது சூரிய சந்திர கிரகணம்.
உன் காதலில் முழுமையில்லை
என் காதலில் வரமுமில்லை.

இரண்டு வயதுக்குழந்தையின் சாமர்த்தியம் கூட தெரியாத பேதை இவள்.
என் கண்கள் கடலில் மூழ்கியும், கண்ணாளனின் கருணை இல்லை.
கடவுளாகிப்போனான் அவன் அதாவது
கல்லாகிப்போனான்.

நான்கு வருடம் நாராய் போனது.
உன்னை காதலித்த இரு வருடம்
உன்னை மறக்க முயன்ற இரு வருடம்.
ஐந்தாம் வருட இன்ப அதிர்ச்சியாய் என்னை தேடி வந்தாய் !

என்னை காதலிப்பதாய் உணர்ந்தாய்
என் நான்கு வருட அழிவிற்கு நீதி கேட்ட போது
எனக்கு possessive என்றாய்.
உன் கண்ணில் நான் என்னை பார்த்ததும் உண்மை
அதில் உன் குற்ற உணர்வு பாராததும் உண்மை.

மீண்டும் கைப்பிடிப்போம் என்றாய்!

உன்னை பிடிக்கும்
உன்னுடன் வாழப்பிடிக்கும்
உனக்காக சாகப்பிடிக்கும்
ஆனால் உன் சாக்குப்போக்கு காரணம் பிடிக்கவில்லை.

என்னிடம் உனக்கு இரண்டாம் முறை காதல் வரக்காரணம் புரியவில்லை
புரியாத காதல் எளிதில் பிரியாதா?

முதன் முறை பூகம்பத்தில் ஏற்பட்ட தாக்கமே
பத்து வருடமாய் இன்னும் பாத்தி கட்டி நிற்கும் போது
இரண்டாம் முறை ஏற்க மனம் இடம் கொடுக்குமா?
கொடுத்தாலும் தாங்குமா ???????????

இன்று உனக்கு ஒரு காதலி
எனக்கு ஒரு காதலன்
நாம் இருவரும் நண்பர்கள்!
திரைப்படங்கள் கூட இன்னும் சித்தரிக்காத உறவு இது.

நன்றி சொல்ல கடமைப்பட்டு இருக்கிறேன் உனக்கு
நான் தவிக்க தவிக்க என் காதலை தூக்கி ஏறிந்ததற்கு!